13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஹரிஷ் ராணாவுக்கு கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா, கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டு நூறு சதவீத ஊனத்துடன் கோமாவில் இருந்தார். மருத்துவக் குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு உயிர் காக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையின்படி ஹரிஷ் மீண்டு வர வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சைகளை நிறுத்த அனுமதி அளித்தது. இந்தியாவில் செயலற்ற நிலையில் இருக்கும் ஒருவருக்கு கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த தீர்ப்பு ஹரிஷின் குடும்பத்தினருக்கு நீண்ட கால துயரத்திலிருந்து ஒரு விடிவை ஏற்படுத்தியுள்ளது.