ஷரீப் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில் வங்கதேச அரசின் புகாரை திட்டவட்டமாக மறுத்தது பிஎஸ்எஃப்

இன்க்லாப் மஞ்ச் தலைவர் ஷரீப் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில் குற்றவாளிகள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக வங்கதேச காவல்துறை கூறிய புகாரை மேகாலயா போலீசாரும் பிஎஸ்எஃப் படையினரும் மறுத்துள்ளனர். யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இந்த விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வங்கதேச தரப்பிலிருந்து முறையான தகவல்கள் எதுவும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்திய எல்லைக்குள் எவரும் சட்டவிரோதமாக நுழையவில்லை என்றும், இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வங்கதேச காவல்துறையின் கூற்றை ஆதாரமற்றது என்று நிராகரித்துள்ள மேகாலயா போலீஸ், எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிவித்துள்ளது.