லண்டனில் இந்திய இளைஞரை அடிமை என இழிவாக பேசிய மேலாளருக்கு 81 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி

லண்டனில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மதுேஷ் ரவிச்சந்திரன் என்பவரை, அங்குள்ள மேலாளர் ‘அடிமை’ என்றும் ‘ஏமாற்றுக்காரர்’ என்றும் கூறி இனவெறியுடன் விமர்சித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் ரவிச்சந்திரனை அதிக வேலை வாங்கிக் கொடுமைப்படுத்தியதோடு, அவரை வேலையிலிருந்தும் நீக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் மனவேதனையடைந்த ரவிச்சந்திரன் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் அபாட், ரவிச்சந்திரன் மீதான இனவெறி தாக்குதல் உண்மை என்று உறுதிப்படுத்தினார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இந்திய இளைஞருக்கு இழப்பீடாக 67 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 81.34 லட்சம் ரூபாய்) வழங்குமாறு அந்த மேலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வருங்காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அவருக்குக் கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.