ரூ.7 கோடிக்கு மேல் கொள்ளை! ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல நடித்து பெங்களூருவில் பண வேனை கடத்திச் சென்ற கும்பல்: சினிமா பாணியில் நடந்த பயங்கரம்

பெங்களூருவின் சவுத் எண்ட் சர்க்கிள் அருகே புதன்கிழமை மதியம் நடந்த பரபரப்பான கொள்ளை சம்பவத்தில், ரிசர்வ் வங்கியின் (RBI) அதிகாரிகள் என நடித்து 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல், பண வேனில் இருந்து ₹7 கோடியே 11 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றது. தனியார் வங்கியின் கிளையில் இருந்து பணத்தை எடுத்துச் சென்ற வேனை மறித்த கொள்ளையர்கள், ‘ஆவணச் சரிபார்ப்பு’ என்ற பெயரில் ஊழியர்களை வெளியே வரச் செய்தனர். ஊழியர்கள் சந்தேகம் அடைந்தவுடன், துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டி, மொபைல் போன்களைப் பறித்து, பண வேனைக் கடத்திச் சென்றனர்.
இந்த கொள்ளைத் திட்டம் மிகவும் துல்லியமாக செயல்படுத்தப்பட்டதால், காவல்துறைக்கு தகவல் கிடைத்த பிறகும் சம்பவத்தின் விவரங்களை அறிய ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. ‘இந்திய அரசு’ முத்திரையும், போலியான நம்பர் பிளேட்டும் கொண்ட இன்னோவா காரில் வந்த கொள்ளையர்கள், பணத்தை ஃப்ளைஓவரின் நடுவில் இறக்கிவிட்டு, தமிழ்நாடு அல்லது ஆந்திரப் பிரதேசம் நோக்கித் தப்பிச் சென்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. ஆயுதம் வைத்திருந்த இரண்டு பாதுகாப்பு காவலர்கள் ஒருமுறை கூடச் சுடாதது குறித்து விசாரணை நடந்து வருகிறது.