மத்திய கிழக்கு போருக்கு நடுவே இந்தியாவின் அதிரடி திட்டம் எரிபொருள் மற்றும் உர விநியோகத்தில் தட்டுப்பாடு நீங்கியது

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவின் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு வலுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் உர அமைச்சகத்தின் தகவல்படி, நாட்டில் எல்பிஜி, பெட்ரோல், டீசல் மற்றும் உரங்களின் இருப்பு போதுமான அளவில் உள்ளது. சமீபத்தில் எரிவாயு தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் பீதி ஏற்பட்டு முன்பதிவுகள் அதிகரித்த போதிலும், சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தியை 40 சதவீதம் உயர்த்தி நிலைமை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிலிண்டர் தேவையை குறைக்க நகர்ப்புறங்களில் பிஎன்ஜி இணைப்புகள் வேகமாக வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு கூடுதல் கையிருப்பைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டை விட யூரியா மற்றும் டிஏபி உரங்களின் இருப்பு தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச விநியோகத் தடையைத் தவிர்க்க ரஷ்யா, மொராக்கோ மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் மூலோபாய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன, இதன் மூலம் மாற்று கடல் வழிகளில் உரங்கள் பாதுகாப்பாக வந்தடைகின்றன. உர விற்பனையை கண்காணிக்க 652 மாவட்டங்களில் டிஜிட்டல் கண்காணிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் விவசாயத் தேவைகளில் எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படாது என்று அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.