போதைப் இருமல் மருந்து கடத்தல் ஊழல்! பணிநீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டபிளின் ஆடம்பர பங்களா; அதிர்ச்சியில் அமலாக்கத்துறை

உத்தரபிரதேசத்தில் முன்னாள் கான்ஸ்டபிள் அலோக் பிரதாப் சிங் சம்பந்தப்பட்ட இருமல் மருந்து கடத்தல் வழக்கில் சுமார் ₹1000 கோடிக்கும் அதிகமான பணமோசடி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சர்ச்சைக்குரிய வழக்கில் தற்போது லக்னோவில் உள்ள அவரது ஆடம்பர பங்களா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 7,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பங்களாவின் கட்டுமானச் செலவு ₹5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தக் காவலர் இவ்வளவு பெரிய சொத்துக்களை எப்படி ஈட்டினார் என்று அமலாக்க இயக்குநரகம் (ED) விசாரித்து வருகிறது. பணமோசடி புகாரின் பேரில் உ.பி., ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களில் ED சோதனை நடத்தியது. கோடீன் கலந்த இருமல் மருந்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல் மற்றும் கடத்திய குற்றச்சாட்டுகள் பிப்ரவரி 2024 இல் வெளிவந்ததிலிருந்து இதுவரை 120-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.