புத்தாண்டு பார்ட்டிக்கு உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் டெலிவரி ஊழியர்கள்

இன்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ள நிலையில், ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தெலுங்கானா கிக் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்திய ஆப் சார்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. சென்னை, பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இன்று பணியைப் புறக்கணிக்க உள்ளனர். இதனால் புத்தாண்டு விருந்துக்கு உணவு ஆர்டர் செய்பவர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
டெலிவரி ஊழியர்களின் வருமானக் குறைவு, 10 நிமிட டெலிவரி தரும் கூடுதல் அழுத்தம் மற்றும் போதிய சமூக பாதுகாப்பு இல்லாமை ஆகியவற்றை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கும் அதிவேக டெலிவரி முறையை மாற்ற வேண்டும் என்றும், முறையான காப்பீடு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இன்றைய தேவைகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகிறது.