பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம்

பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்திற்கு முன்னதாக இந்திய அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் உடல்நிலை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் உடல் எடையும் குறைந்துள்ள நிலையில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எந்தவித ஆபத்தையும் எடுக்க விரும்பவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை வரை அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்ட பின்னரே விளையாடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத மகனை கவனித்துக்கொள்ள அபிஷேக் சர்மாவின் பெற்றோர் கொழும்பு வந்தடைந்துள்ளனர். டெல்லியில் அவர் சிகிச்சை பெற்றபோதும் அவர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அணியில் தனிப்பட்ட பயிற்சியாளர்கள் இருந்தாலும் குடும்பத்தினரின் அருகாமை அவருக்கு மனவலிமையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.