தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்காதது ஏன் கனிமொழி எம்.பி முற்றுகையால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மூன்று நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவனை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பாதுகாப்புடன் அவர்களை வெளியேற்றிய நிலையில், அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு மக்கள் அளித்துள்ள சாட்டையடியே இந்த முற்றுகை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டதாகத் தெரிவித்தார். இதைக் கண்டித்து வரும் மார்ச் 17-ஆம் தேதி அதிமுக கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.