சிலிண்டர் தட்டுப்பாட்டால் எலக்ட்ரிக் அடுப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு மின் கட்டணம் உயருமா

தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் மாற்று ஏற்பாடாக மின்சார அடுப்புகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் மின் அடுப்புகளுக்கான தேவை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் இடையூறில்லாத சமையலுக்கு இந்த மின்சார அடுப்புகளையே தற்போது பெரிதும் நம்பியுள்ளனர்.
மின் அடுப்புகளைப் பயன்படுத்துவதால் சமையல் விரைவாக முடிவதோடு பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும், ஒரு மணிநேரப் பயன்பாட்டிற்கு சுமார் 1.5 முதல் 2 யூனிட் வரை மின்சாரம் செலவாகும் என்பதால் மாத இறுதியில் மின் கட்டணம் சற்று அதிகரிக்கக்கூடும். முறையான ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற அடுப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், சமையலுக்குத் தேவையானவற்றை முன்னரே தயார் செய்து வைப்பதன் மூலமும் மின் விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாகச் சமைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.