கோவை அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்கள் திடீர் உடல்நலம் பாதிப்பு

கோவை கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட 30 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகள் என மொத்தம் 43 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு நடத்தி உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பெற்றோர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கவனக்குறைவாகச் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் உறுதி அளித்துள்ளார்.