காவல் நிலையத்தில் இருந்த ஒரு கோடி மதிப்புள்ள கஞ்சாவை எலிகள் தின்றதால் குற்றவாளி விடுதலை

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரு வினோதமான காரணத்திற்காக போதைப்பொருள் கடத்தல் வழக்கிலிருந்து குற்றவாளி ஒருவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஓர்மஞ்சி போலீசார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து இந்திரஜித் ராய் என்பவரைக் கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கின் விசாரணையின் போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீசாரால் முடியவில்லை. இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 200 கிலோ கஞ்சாவையும் காவல் நிலையக் கிடங்கில் இருந்த எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆதாரங்களைப் பாதுகாப்பதில் போலீசாரின் அலட்சியத்தைக் கண்டித்த நீதிமன்றம் போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து உத்தரவிட்டது. போலீஸ் கண்காணிப்பில் இருந்த ஒரு கோடி மதிப்புள்ள போதைப்பொருள் காணாமல் போனது மற்றும் எலிகள் மீது பழி சுமத்தப்பட்டது ஜார்க்கண்ட் காவல்துறையின் பாதுகாப்பு மற்றும் விசாரணை நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.