உத்தரப்பிரதேசத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்து மாணவி மற்றும் அவரது நண்பர்கள் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் பிறந்தநாள் கொண்டாட காபி ஷாப்பிற்கு சென்ற செவிலியர் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூர அனுபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி தனது நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டிருந்த போது, ‘லவ் ஜிகாத்’ எனக் கூறி ஒரு கும்பல் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியது. மாணவியின் செல்போனை பறித்துக் கொண்டதோடு, அவரது நண்பர்களையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. காபி ஷாப்பின் உரிமையாளர் ஷைலேந்திர வர்மா, அக்கும்பல் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், முதற்கட்ட விசாரணையில் இதில் ‘லவ் ஜிகாத்’ போன்ற எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது அடிதடி மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது நண்பர்களை தானே அழைத்ததாகவும், தேவையற்ற முறையில் தங்களை துன்புறுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.