இந்துக்கள் மீதான தாக்குதல் புகாரை மறுத்தது வங்கதேசம் இந்தியாவுக்கு கடும் பதில்

வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான வன்முறை குறித்த இந்தியாவின் கவலையை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. தரைமட்ட யதார்த்தத்தை அறியாமல் இந்தியா இந்த விவகாரத்தை மிகைப்படுத்தி கூறுவதாகவும், இது தவறான தகவல் என்றும் டாக்கா தெரிவித்துள்ளது. இந்துக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் என்று கூறப்படுவதை மறுத்துள்ள வங்கதேசம், இவை அனைத்தும் தனிப்பட்ட குற்றச் செயல்கள் என்றும், நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகளை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளது.
மைமன்சிங் மற்றும் ராஜ்பாரி மாவட்டங்களில் இந்துக்கள் கொல்லப்பட்டது குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், அந்தச் சம்பவங்கள் தொடர்பாக வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது. இத்தகைய குற்றச் சம்பவங்களைச் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையாகக் காட்டுவது இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்கும் என்று வங்கதேசம் எச்சரித்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, அண்டை நாட்டு உறவைப் பேணுவதற்கு இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.