இந்தியா உடனான மோதலைத் தவிர்க்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் உலகம் சந்திக்கப்போகும் பாரிய சரிவு இதுதான்

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் எடுத்துள்ள அதிரடி முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை ஐசிசி கடுமையாகக் கண்டித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று இந்தியப் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது இத்தகைய முடிவு சமத்துவத்திற்கு எதிரானது என ஐசிசி எச்சரித்துள்ளது. இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்காவிட்டால் அந்தப் புள்ளிகள் நேரடியாக இந்தியாவிற்கு வழங்கப்படும், இது பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நிதி நெருக்கடியையும் உருவாக்கும்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி உலகளவில் அதிக வருவாயை ஈட்டித் தரும் ஒரு களமாகும். இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதன் மூலம் விளம்பரதாரர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் பல கோடி ரூபாய் வருமானத்தை பாகிஸ்தான் இழக்க நேரிடும். இது உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் வீரர்களின் ஊதியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், ஐசிசி ஈட்டும் வருவாய் சிறிய நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுவதால், இந்தப் போட்டி ரத்தாவது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் கட்டமைப்பிலும் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.