இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துவோர் கவனத்திற்கு மின்சார வாரியம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

கேஸ் தட்டுப்பாட்டால் இண்டக்ஷன் அடுப்பிற்கு மாறுவோர் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சாதாரண பிளக் பாயிண்டுகளில் இண்டக்ஷன் அடுப்பை பயன்படுத்தினால் ஒயர்கள் உருகி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற உபகரணங்கள் மற்றும் 16 ஆம்பியர் பவர் சாக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சேலம் மின்பகிர்மான வட்ட பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
மின் கசிவைத் தடுக்க வீடுகளில் ஆர்சிடி அல்லது இஎல்சிபி கருவிகளை பொருத்துவது உயிர் காக்க அவசியமாகும். பழைய ஒயரிங் மற்றும் குறைந்த தடிமன் கொண்ட ஒயர்களை தவிர்த்து, 2.5 மிமீ தடிமனுள்ள ஒயர்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது. கோடை காலத்தில் மின் விபத்துகளைத் தவிர்க்க தகுந்த தரை இணைப்புடன் கூடிய த்ரீ-பின் சாக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.