அரசு கல்லூரி வகுப்பறையில் பீர் குடித்தபடி மாணவிகள் அட்டகாசம் சமூக வலைதளங்களில் வைரலாகும் பகீர் வீடியோ

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவிகள் சிலர் வகுப்பறையிலேயே மது அருந்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சிக்காக மாணவிகள் நடனப் பயிற்சி மேற்கொண்டு வந்தபோது, ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றிணைந்து பீர் அருந்துவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், “அவளுக்கும் கொஞ்சம் கொடு” என்று கூறியபடி ஒரு மாணவி மற்றொரு மாணவிக்கு மது பாட்டிலை வழங்குவதும், “குடித்துவிட்டு சரியாக நடனமாட வேண்டும்” என்று அறிவுரை கூறுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காட்சிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கல்வி நிலையங்களுக்குள் இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்கள் நடப்பது சமூகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தை விதைப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சினிமாவில் மது அருந்தும் காட்சிகளைச் சாதாரணமாகக் காட்டுவதே இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற தவறான போக்கிற்கு வழிவகுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் உயர்கல்வித் துறை உரிய விசாரணை நடத்தி மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும், சமூகப் பொறுப்புடன் சினிமா துறையினர் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.