முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டர் விட்ட தூத்துக்குடி மாநகராட்சி விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி

தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணப்பட்ட பணிகளுக்கு மீண்டும் மின்னணு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பி.என்.டி நகர் பூங்கா மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்ட மூன்று திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது.
இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையை கண்டறிய மூத்த வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து வரும் மார்ச் 18-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முயன்றதாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.