நரவனேவின் ‘வெடிகுண்டு’ புத்தகம்: மௌனம் கலைத்தார் முன்னாள் ராணுவ தளபதி!

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ (Four Stars of Destiny) எனும் சுயசரிதை புத்தகம் வெளியாவதற்கு முன்பே நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் விளக்கமளித்துள்ள நரவனே, இந்தப் புத்தகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும், இதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிகள் எதுவும் சந்தையில் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லை விவகாரம் தொடர்பான புத்தகத்தின் சில பகுதிகள் கசிந்ததைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக டெல்லி போலீசார் ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராணுவ தளபதியின் கருத்துக்களை அரசு ஒடுக்க முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார். தற்போது இந்தப் புத்தகத்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தேசிய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.