தரையிறங்கும் போது பயங்கரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சக்கரம் வெடித்து சிதறியதால் பரபரப்பு
March 11, 2026

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தின் ஃபூகெட் நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சக்கரம் தனியாக கழன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஃபூகெட் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஓடுதளம் மூடப்பட்டது.
இந்த விபத்தின் போது விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்தவுடன் பயணிகள் பெரும் அச்சமடைந்தனர். தற்போது விமானம் ஓடுதளத்தில் இருந்து அகற்றப்பட்டு நிலைமை சீரமைக்கப்பட்டு வருகிறது.