சரியான காரணமின்றி கணவரை பிரிந்து சென்றால் ஜீவனாம்சம் கிடைக்காது, உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கணவரை விட்டு பிரிந்து சென்றாலே ஜீவனாம்சம் பெற முடியும் என்ற பொதுவான கருத்துக்கு சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தகுந்த அல்லது நியாயமான காரணமின்றி ஒரு மனைவி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தால், அவர் பராமரிப்புத் தொகை பெற தகுதியற்றவர் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125(4)-ன் படி, கணவர் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பி அழைத்தும், மனைவி முறையான காரணமின்றி மறுத்தால், அவர் ஜீவனாம்சம் கோர முடியாது என்று தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், பிலாஸ்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் சித்திரவதை புகார்களைக் கூறி பிரிந்து வாழ்ந்து வந்தார். ஆனால், அந்தப் புகார்களுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. கணவர் தனது மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்துக்கொள்ள சட்டப்பூர்வமாக முயற்சி செய்தும், மனைவி எவ்வித நியாயமான காரணமுமின்றி அவருடன் வாழ மறுத்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், தனித்து வாழ்வது சட்டப்படி செல்லாது என்றும், எனவே ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறி குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.