சமூக வலைதள ஹீரோக்கள் தேர்தல் களத்தில் மண்ணைக் கவ்வியதால் வங்கதேச அரசியலில் பெரும் பரபரப்பு

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீழ்த்திய மாணவர் தலைவர்கள் உருவாக்கிய தேசிய குடிமக்கள் கட்சி (NCP), தங்களின் முதல் பொதுத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. நஹித் இஸ்லாம் மற்றும் ஹஸ்னத் அப்துல்லா போன்ற முக்கிய முகங்கள் ஜமாத் தலைமையிலான கூட்டணியில் 30 இடங்களில் போட்டியிட்டனர். ஆனால் சமூக வலைதள ஆதரவு என்பது வாக்கு வங்கியமாக மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் இவர்களின் அரசியல் கனவு தற்காலிகமாக சிதைந்துள்ளது.
மொத்தமுள்ள 300 இடங்களில் பிஎன்பி (BNP) கூட்டணி 211 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார். மாணவர்களின் என்சிபி கட்சி வெறும் 5 முதல் 6 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. போராட்டக் களத்தில் வெற்றி பெற்ற இளைஞர்கள், தேர்தல் அரசியலில் அனுபவமிக்க பிஎன்பி கட்சியின் பலமான கட்டமைப்பிற்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் திணறியதே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.