சட்டம் மற்றும் அரசியலமைப்பு இல்லாமல் தாலிபான் உத்தரவுகளால் தத்தளிக்கும் ஆப்கானிஸ்தான்

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தற்போது அரசியலமைப்பு அல்லது எழுதப்பட்ட சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை. மாறாக தாலிபான் பிறப்பித்த சுமார் 470 கட்டளைகளின் மூலமே அந்த நாடு ஆளப்படுகிறது என்று ஐக்கிய நாடுகளின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இதில் 79 உத்தரவுகள் நேரடியாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளன. இதனால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை இழந்த பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
தாலிபானின் இத்தகைய கட்டுப்பாடுகளால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் உழைப்பு பங்களிப்பு வெறும் 6 சதவீதமாகக் குறைந்துள்ளது. சுமார் 79 சதவீத பெண் குடும்பத் தலைவிகள் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் தவித்து வருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. மேலும் 2025 ஆம் ஆண்டில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்து 746 ஆக உயர்ந்துள்ளது. சட்டத்தின் ஆட்சி மறைந்து உத்தரவுகளின் ஆட்சி நடப்பதால் பெண்களும் குழந்தைகளும் அங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.