காஷ்மீரில் மெகபூபா முஃப்தி மற்றும் எம்பி ருஹுல்லா மெஹ்தி வீட்டுக்காவல் மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பிடிபி தலைவர் மெகபூபா முஃப்தி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி எம்பி அகா சையது ருஹுல்லா மெஹ்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இல்திஜா முஃப்தி மற்றும் வஹீத் பாரா போன்ற தலைவர்களின் வீடுகளுக்கு முன்பும் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே ஆண்டில் இடஒதுக்கீடு சிக்கலைத் தீர்ப்பதாக முதல்வர் உமர் அப்துல்லா உறுதியளித்த போதிலும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசின் இந்த நடவடிக்கை மாணவர்களின் குரலை ஒடுக்கும் முயற்சி என்று எம்பி ருஹுல்லா விமர்சித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான குழுவின் அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாகவும் வஹீத் பாரா கண்டனம் தெரிவித்துள்ளார்.