வெளிநாட்டில் புதின் மலத்தைக்கூட விடாத மெய்க்காவலர்கள்: ‘பூப் சூட்கேஸின்’ மர்மம் என்ன?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவருடைய மெய்க்காவலர்கள் ‘பூப் சூட்கேஸ்’ எனப்படும் ஒரு சிறப்புப் பெட்டியை எடுத்துச் செல்கின்றனர். அதிபரின் மலத்தை (உடற்கழிவு) சீலிடப்பட்ட பைகளில் பத்திரமாகப் பாதுகாத்து, அது வெளிநாடுகளில் வீசப்படுவதைத் தவிர்த்து, மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டுவரப்படுகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் அவருடைய உடல்நிலை குறித்த தகவல்களைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதினின் உடல்நிலை குறித்து அவ்வப்போது புற்றுநோய் அல்லது பார்கின்சன்ஸ் போன்ற நோய்கள் குறித்த வதந்திகள் பரவுவதுண்டு. ஒருவரது மலப் பரிசோதனை மூலம் அவருடைய உடல் ஆரோக்கியம், செரிமான மண்டலம் மற்றும் தீவிர நோய்கள் குறித்த முக்கியமான தகவல்களை அறிய முடியும். இதன் காரணமாகவே, புதினின் பாதுகாப்புப் படையினர், அவருடைய தனிப்பட்ட உடல்நல விவரங்கள் வேறு எந்த நாட்டின் கைகளுக்கும் கிடைத்துவிடாமல் தடுக்க இந்த விசித்திரமான மற்றும் தீவிரமான பாதுகாப்பை மேற்கொள்கின்றனர்.