ராமர் கோயில் தாக்குதல் சதித் திட்டத்தின் ‘சூத்திரதாரி’ சிறையிலேயே கொலை!

அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பரிதாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் ரஹ்மான், சக கைதியால் தாக்கி கொல்லப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்தச் சம்பவம் நடந்ததாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.
அருண் சௌத்ரி என்ற சக கைதி, கூர்மையான ஆயுதத்தால் அப்துல் ரஹ்மானைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஞாயிறு இரவு நடந்தாலும், திங்கள்கிழமை காலையில்தான் சிறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த சிறைக்குள் கைதிக்கு ஆயுதம் கிடைத்தது எப்படி? சிறைக் கண்காணிப்பில் குறைபாடு உள்ளதா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த ஆண்டு அயோத்தி தாக்குதல் சதி வழக்கில் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை ரஹ்மானின் குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவர் ஒரு மின்சார ரிக்ஷா ஓட்டுநர் என்றும், பொய்யான வழக்கில் அவர் சிக்க வைக்கப்பட்டதாகவும் அவரது தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். “என் மகனுக்கு இதயத்தில் துளை இருந்தது, பெரும் கடன் வாங்கித்தான் அவனுக்கு சிகிச்சை அளித்தோம். அவன் எந்தத் தவறும் செய்யவில்லை,” என அவரது தாய் கூறியுள்ளார்.