முஸ்லிம் வாரிசுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம் வருமா பொது சிவில் சட்டமே தீர்வு என உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து

முஸ்லிம் பெண்களின் சொத்துரிமையில் சமத்துவத்தை உறுதி செய்ய, 1937-ஆம் ஆண்டு ஷரியத் சட்டத்தின் பாகுபாடுள்ள பிரிவுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, வாரிசுரிமை சட்ட சிக்கல்களைத் தீர்க்க ‘பொது சிவில் சட்டம்’ (UCC) ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதாடினார்.
ஷரியத் சட்டத்தை நேரடியாக ரத்து செய்வது சட்ட ரீதியான வெற்றிடத்தை உருவாக்கும் என நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என நீதிபதி ஜெயமால்யா பாக்சி குறிப்பிட்டார். ‘ஒருவருக்கு ஒரு மனைவி’ கொள்கை மற்றும் சமமான வாரிசுரிமையை உறுதி செய்ய சட்ட சீர்திருத்தம் அவசியம் எனக் கூறிய நீதிமன்றம், இவ்விவகாரத்தை சட்டத்துறையின் பரிசீலனைக்கு விட்டுள்ளது.