‘பண மழை பொழியும்’ எனக்கூறி ஆடம்பர ஹோட்டலில் பூஜை மோசடி; சாமியார் உட்பட 3 பேர் கைது

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் ‘பண மழை’ பெய்ய வைப்பதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றியதாக, போலி சாமியார் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு நட்சத்திர விடுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைக்க, நகர காவல் ஆணையர் பிரவீன் பவார் உத்தரவின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. டிசம்பர் 28 முதல் விடுதியில் தங்கியிருந்த விகாஸ் உத்தர்வர் என்பவர் தன்னை சாமியார் என கூறிக்கொண்டுள்ளார். இவருடன் விலாஸ் கோஹில் மற்றும் சங்கர் கஜாலே ஆகிய இரண்டு கூட்டாளிகளும் மற்றொரு அறையில் தங்கியிருந்துள்ளனர்.
போலீசார் இரண்டு அறைகளிலும் சோதனை செய்தபோது, குங்குமம், உலர்ந்த வேர்கள், தேங்காய்கள் மற்றும் மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அப்பாவி மக்களை ‘பண மழை’க்கான ஆசைகாட்டி, அவர்களிடம் இருந்து பெரிய தொகையை இந்த கும்பல் பறித்து வந்துள்ளது. உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிநாத் மகாதுலேவின் புகாரின் அடிப்படையில், இந்திய நீதிச் சம்ஹிதை மற்றும் மகாராஷ்டிரா சூனியம் தடுப்பு சட்டத்தின் கீழ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராந்தி சௌக் காவல் நிலையத்தில் இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.