துருக்கியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மெகா ஆபரேஷன் 482 பேர் கைது

துருக்கியில் மிகப்பெரிய தாக்குதல் திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு நாட்களில் 482 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து, அந்நாட்டு உள்துறை அமைச்சர் அலி யர்லிகாயா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் யாலோவா நகரில் நடந்த மோதலில் மூன்று போலீசார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த ஆபரேஷனில் தேசிய போலீஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் இணைந்து 25 மாகாணங்களில் சோதனை நடத்தின. துருக்கி ஒரு காலத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய மையமாக இருந்த நிலையில், மீண்டும் அத்தகைய சூழல் உருவாகாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களை அழிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு பாதுகாப்புத் துறை தற்போது செயல்பட்டு வருகிறது.