டெல்லி மாசு விவகாரம் மோடி அரசை சாடிய நாடாளுமன்றக் குழு! கண்காணிப்பு அமைப்பை மேம்படுத்த உத்தரவு

டெல்லி மற்றும் என்சிஆரின் மோசமான காற்று மாசு சூழ்நிலை குறித்து, பாஜக எம்.பி. புவனேஸ்வர் கலிதாவின் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், டெல்லியில் இன்னும் ஏழு கையேடு காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் (Manual Air Quality Monitoring Stations) இருப்பதாகவும், இதன் மூலம் உண்மையான மாசு நிலவரத்தை அறிய முடியாது என்றும் குழு தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, இந்த ஏழு நிலையங்களையும் உடனடியாக அதிநவீன ‘தொடர்ச்சியான சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு அமைப்பு’ (CAAQMS) முறைக்கு மேம்படுத்த வேண்டும்.
மேலும், 2009-க்கு பிறகு ‘தேசிய சுற்றுப்புற காற்று தர நிலைகள்’ (NAAQS) திருத்தப்படாமல் இருப்பது குறித்து குழு கவலை தெரிவித்துள்ளது. மாசு பாதிப்பிலிருந்து குழந்தைகள் மற்றும் முதியோரைப் பாதுகாக்க, அனைத்து அரசுப் பள்ளிகள் (குறிப்பாக ஆரம்பப் பிரிவுகள்) மற்றும் அரசு மருத்துவமனைகளில் உடனடியாக காற்று சுத்திகரிப்பான்களை (Air Purifiers) நிறுவ குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், போக்குவரத்து போலீசார் மற்றும் டெலிவரி ஊழியர்களுக்கு வழக்கமான சுகாதாரப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.