செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் பைக்கில் சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற 14 வயது சிறுமி, மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, அத்திவாக்கம் காட்டுப் பகுதியில் மர்ம நபர்கள் இருவர் இவர்களை வழிமறித்துள்ளனர். பைக்கிலிருந்து விழுந்த சிறுமியை ஏரிப் பகுதிக்கு தூக்கிச் சென்று இந்த கொடூரத்தைச் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். தற்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் பிடிபட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.