ஐபிஎல் ஏலத்திற்கு பின் ருத்ரதாண்டவம் ஆடும் குருணால் பாண்டியா அதிரடி சதம்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் பரோடா அணி கேப்டனும் ஆர்சிபி வீரருமான குருணால் பாண்டியா மிரட்டலான ஃபார்மில் உள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 63 பந்துகளில் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 18 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கடந்த மூன்று போட்டிகளில் மட்டும் 248 ரன்களை விளாசி, ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போட்டியில் பரோடா அணி 417 ரன்கள் குவிக்க குருணால் பாண்டியாவுடன் நித்யா பாண்டியா மற்றும் அமித் பாசி ஆகியோரும் சதமடித்து வலு சேர்த்தனர். தொடக்க வீரர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 230 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அமித் 127 ரன்களும் நித்யா 122 ரன்களும் எடுத்து அசத்தினர். பரோடா அணியின் இந்த அதிரடி ஆட்டம் மற்றும் குருணாலின் தொடர்ச்சியான ரன் குவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.