உறைபனியில் சிக்கியது வட இந்தியா கடும் பனிமூட்டத்தால் போக்குவரத்து முடக்கம்

வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக சாலை மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பித்தன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெய்து வரும் தொடர் பனிப்பொழிவு சமவெளிப் பகுதிகளில் குளிரின் தாக்கத்தை மேலும் அதிகரித்துள்ளது. தலைநகரில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகரமான நிலையிலேயே நீடித்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில மாவட்டங்களில் வெப்பநிலை மிகக்குறைவாகப் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராஜஸ்தானின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், வட இந்தியா முழுவதும் இன்னும் சில நாட்களுக்கு கடும் பனிமூட்டமும் குளிரும் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.