ஈரான் போராட்டக்களத்தில் குதித்த ட்ரம்ப் மற்றும் கமேனியின் நேரடி போர் எச்சரிக்கை

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது ஈரான் அரசு தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்றும், நேரடி தலையீடு இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் உச்ச தலைவர் கமேனியின் ஆலோசகர், ஈரானின் பாதுகாப்பில் தலையிடும் எவருடைய கரமும் துண்டிக்கப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022-ம் ஆண்டிற்குப் பிறகு ஈரானில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக இது கருதப்படுகிறது. இதுவரை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலையீடுகளால் ஏற்பட்ட விளைவுகளை சுட்டிக்காட்டியுள்ள ஈரான், தங்கள் நாட்டின் பாதுகாப்பு என்பது ‘சிவப்புக்கோடு’ என்றும், இதில் அமெரிக்காவின் குறுக்கீடு இருந்தால் அதன் விளைவுகள் மிகவும் கசப்பானதாக இருக்கும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.