இந்தோ-பாக் மோதல்: விமானக் கட்டணம் 6 மடங்கு உயர்வு; ரசிகர்கள் அதிர்ச்சி!

கொழும்பு: வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஹை-வோல்டேஜ் கிரிக்கெட் போட்டியை நேரில் காண திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் உங்கள் பாக்கெட் காலியாவது உறுதி. பாகிஸ்தான் அணி விளையாட ஒப்புக்கொண்டதையடுத்து, மும்பையிலிருந்து கொழும்பு செல்வதற்கான விமானக் கட்டணம் விண்ணை முட்டியுள்ளது.
வழக்கமாக 10,000 ரூபாயாக இருந்த இருவழிப் பயணக் கட்டணம் (Round Trip), தற்போது திடீரென 60,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. கட்டண உயர்வு ரசிகர்களை கவலையடையச் செய்தாலும், மைதானத்தில் போட்டியை காணும் ஆர்வம் சற்றும் குறையவில்லை.
இந்தியா – பாகிஸ்தான் மோதல் உறுதியானதைத் தொடர்ந்து பிசிசிஐ (BCCI), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) நன்றி தெரிவித்துள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்குவது பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
இன்று உலகக்கோப்பையில் பாகிஸ்தான் – அமெரிக்கா, நியூசிலாந்து – ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து – நமீபியா அணிகள் மோதுகின்றன. இருப்பினும், கிரிக்கெட் வட்டாரங்களில் தற்போது கொழும்புப் போட்டி மற்றும் அதன் பயணச் செலவுகள் குறித்த விவாதமே அதிகம் பேசப்பட்டு வருகிறது.