இந்தியாவிற்கு பாடம் எடுக்கும் வங்கதேசம் உலக அளவில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்கள் உலக அரங்கில் அந்த நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்துக்களின் வீடுகள் எரிக்கப்படுவதும், தீபு சந்திர தாஸ் போன்ற இளைஞர்கள் கும்பலால் அடித்துக் கொல்லப்படுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்தியா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனால், தனது தோல்விகளை மறைக்க நினைக்கும் வங்கதேசம், தற்போது இந்தியாவிற்கு சிறுபான்மையினர் நலன் குறித்து தேவையற்ற அறிவுரைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி, இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வங்கதேச வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்.எம். மெகபூபுல் ஆலம் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்களை சுட்டிக்காட்டி அவர் கவலை தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது சொந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுக்கத் தவறிய வங்கதேசம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது தங்களின் தோல்வியை திசைதிருப்பும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.