கிராம்பு விலை கிடுகிடு உயர்வால் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் மாறாமலை மற்றும் மகேந்திரகிரி பகுதிகளில் நிலவிய மோசமான சூழலால் கிராம்பு உற்பத்தி 90 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால் உள்நாட்டு சந்தையில் வரத்து குறைந்து, கடந்த டிசம்பரில் 900 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம்பு தற்போது 1000 ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த திடீர் விலை ஏற்றம் அன்றாட சமையல் மற்றும் மருத்துவத் தேவைக்கு கிராம்பைப் பயன்படுத்தும் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டுத் தட்டுப்பாட்டைப் போக்க தற்போது இந்தோனேசியாவிலிருந்து கிராம்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் இரண்டாம் ரக கிராம்புகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் கணித்துள்ளனர். போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகளும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.