காசாவில் 18 மாதக் குழந்தையின் உடலில் சிகரெட் சூடு வைத்து இஸ்ரேலிய ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்

காசாவின் அல் மகாசி அகதி முகாமில் 18 மாதக் குழந்தை கரீம் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்தியுள்ள மனிதத்தன்மையற்ற தாக்குதல் உலகையே அதிரவைத்துள்ளது. குழந்தையின் தந்தை ஒசாமா அபு நசரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர் கண் முன்னாலேயே பச்சிளம் குழந்தையின் உடல் முழுவதும் எரியும் சிகரெட்டுகளால் சூடு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பிஞ்சு குழந்தையின் காலில் ஆணி அடித்து இஸ்ரேலியப் படையினர் கொடூரத்தின் உச்சத்தை தொட்டுள்ளனர்.
பாலஸ்தீன தொலைக்காட்சியின் படி, ஒசாமாவையும் அவரது குழந்தையையும் பிடித்துச் சென்ற ராணுவம் சுமார் 10 மணி நேரம் இந்த சித்திரவதையைத் தொடர்ந்துள்ளது. தற்போது மீட்கப்பட்டுள்ள கரீமின் உடலில் உள்ள காயங்களைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். செஞ்சிலுவைச் சங்கம் மூலம் குழந்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாலும், தந்தை ஒசாமா இன்னும் இஸ்ரேலிய ராணுவத்தின் பிடியிலேயே உள்ளார். இந்த கொடூரச் செயல் சர்வதேச அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.