போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி

மத்திய கிழக்கில் கடந்த 25 நாட்களாக நீடித்து வரும் போர் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையூட்டும் செய்திகளால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்துள்ளது. அமெரிக்கா சார்பில் ஈரானுக்கு 15 அம்ச அமைதித் திட்டம் அனுப்பப்பட்டதை அடுத்து, புதன்கிழமை காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் வரை சரிந்து ஒரு பேரல் 87.80 டாலராக குறைந்தது. போர் நிறுத்தப்பட்டால் எண்ணெய் விலை பாறை உருள்வது போல வேகமாகக் குறையும் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்து இன்னும் முழுமையாக சீராகவில்லை என்றாலும், இந்த போர் நிறுத்த அறிவிப்பு உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தளர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் அரசு கட்டுக்குள் வைத்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை குறைப்பை இந்திய நுகர்வோர் ஆவலுடன் கவனித்து வருகின்றனர். இருப்பினும், இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.