திருவிதாங்கூர் அரண்மனையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மர்மமான முறையில் திருட்டு

திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற திருவிதாங்கூர் மன்னர் அரண்மனையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத மாலை மற்றும் வைர நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரண்மனையின் மூத்த உறுப்பினர் அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய், தனது படுக்கையறை அலமாரியில் இருந்த 40 சவரன் எடையுள்ள 12 வகை ஆபரணங்கள் காணாமல் போனதாக பேரூர் கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு கொண்ட இந்த அரண்மனைக்குள் வெளிநபர்கள் நுழைய வாய்ப்பில்லை என்பதால், அங்குள்ள ஊழியர்கள் மீது போலீசாரின் சந்தேகம் திரும்பியுள்ளது. குறிப்பாக கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மன்னர் குடும்பத்தினரே முதலில் ரகசிய விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காத நிலையில், தற்போது காவல்துறை இந்த மர்ம முடிச்சை அவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.