கர்நாடகாவில் அதிவேக லாரி மோதியதில் முன்னாள் பிரதமரின் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 3 போலீசார் பலி

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் பெங்களூரு-பல்லாரி நெடுஞ்சாலையில் 16 சக்கர லாரி ஒன்று போலீஸ் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் காரை சுமார் 300 மீட்டர் தூரம் லாரி இழுத்துச் சென்றதில், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தாரிமணி உட்பட மூன்று போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த மஞ்சுநாத் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் மேலும் இரண்டு போலீசார் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். விபத்துக்கு காரணமான லாரி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.