காதல் விவகாரத்தில் மகளையும் காதலனையும் கொன்று கிணற்றில் வீசிய தந்தை

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 19 வயது மகள் மற்றும் அவரது காதலனை கௌரவக் கொலை செய்த தந்தை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதலர்களை சமாதானம் பேசுவதாகக் கூறி வரவழைத்த தந்தை, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் அவர்களை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் ஆதாரங்களை மறைக்க உடல்களை 100 அடி ஆழமுள்ள கிணற்றில் வீசியுள்ளார்.
மகளைக் காணவில்லை என அவரே காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தந்தை அளித்த தகவலின்படி அழுகிய நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த கொடூரக் கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.