மத்திய கிழக்கில் போர் பதற்றம் எதிரொலி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் அதிரடியாக ரத்து

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மார்ச் 16 முதல் ஏப்ரல் 10 வரை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பாடத்தேர்வுகளையும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி ரத்து செய்வதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த திடீர் முடிவால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் அக மதிப்பீடு அல்லது முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை கல்வி வாரியம் விரைவில் வெளியிட உள்ள நிலையில் மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம் குறித்த கேள்விக்குறி எழுந்துள்ளது.