லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராப்பர் பாட்ஷா நேரடியாகக் கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

பிரபல ராப்பர் பாட்ஷாவிற்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நேரடியாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அண்மையில் வெளியான ‘டாட்டிரி’ பாடலில் ஹரியானா கலாச்சாரம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தியதாகக் கூறி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த கால எச்சரிக்கைகளை மீறியதால், இம்முறை துப்பாக்கியால் சுடப்போவதாக சமூக வலைதளங்களில் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதனால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் பாட்ஷாவின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஹரியானா மகளிர் ஆணையம் பாட்ஷாவிற்கு சம்மன் அனுப்பி அவரை கைது செய்ய வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் பாரம்பரியத்தை அவர் தொடர்ந்து அவமதிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சல்மான் கான் மற்றும் ரோஹித் ஷெட்டி போன்ற பிரபலங்களை குறிவைத்த இந்த கும்பல், தற்போது பாட்ஷாவை மிரட்டுவது காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தொடர்ச்சியான இந்த மிரட்டல்களால் பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.