ஆஸ்கர் விழாவில் ட்ரோன் தாக்குதல் அபாயம் நிலவுவதால் லாஸ் ஏஞ்சல்ஸில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அதிகரிப்பு

மார்ச் 15 அன்று டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ள 98வது ஆஸ்கர் விருது விழாவிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்திற்கு மத்தியில், கலிபோர்னியா கடற்கரையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என எஃப்பிஐ (FBI) எச்சரித்துள்ளது. இந்த உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் தற்போது உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் மற்றும் சிறப்புப் படைகள் விழா நடைபெறும் இடத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. தொகுப்பாளர் கோனன் ஓ’பிரையன் மற்றும் உலகப் புகழ்பெற்ற திரை நட்சத்திரங்களின் பாதுகாப்பே தங்களின் முன்னுரிமை என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், இந்த மாபெரும் கலை விழாவை எவ்வித இடையூறுமின்றி நடத்த ராணுவம் மற்றும் காவல்துறையின் சிறப்புப் பிரிவுகள் தயார் நிலையில் உள்ளன.