வீட்டில் எத்தனை சிலிண்டர் வைக்கலாம்? தட்டுப்பாட்டை தவிர்க்க அரசு அதிரடி விதிமுறை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவின் எரிவாயு இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த தேவையில் 55 சதவீத விநியோகம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் மக்கள் அச்சமடைந்து அதிகப்படியாக முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், பதுக்கலில் ஈடுபடுவோர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எச்சரித்துள்ளது.
தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு வீட்டு இணைப்பிற்கு ஆண்டுக்கு 12 மானிய விலை சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. தேவைப்பட்டால் சந்தை விலையில் கூடுதலாக 3 சிலிண்டர்கள் என மொத்தம் 15 சிலிண்டர்கள் வரை ஒரு ஆண்டில் பெற முடியும். இருப்பினும், பாதுகாப்பு கருதி ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் இரண்டு சிலிண்டர்கள் (ஒன்று பயன்பாட்டிற்கு, மற்றொன்று கையிருப்பு) மட்டுமே வைத்திருக்க அனுமதியுண்டு. வணிக ரீதியான பயன்பாட்டிற்கு 100 கிலோ வரை சிலிண்டர்களை வைத்திருக்க விதிமுறைகள் அனுமதிக்கின்றன.