நாடாளுமன்றத்தில் அதானி மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி

ஈரான் மற்றும் இஸ்ரேல் போரினால் ஏற்பட்டுள்ள எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடும் அமளி ஏற்பட்டது. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் படும் அவதி குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழலில் மத்திய அரசு மௌனம் காப்பதாக சசி தரூர் குற்றம் சாட்டியதுடன், இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதானி விவகாரம் மற்றும் எப்ஸ்டீன் சர்ச்சை காரணமாக பிரதமர் மோடி அச்சத்தில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வர அஞ்சுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களைப் பதற்றமடைய வேண்டாம் என்று கூறும் பிரதமரே தற்போது மிகுந்த கவலையில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் அரசின் மெத்தனப் போக்கினை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின.