ஈரானில் பள்ளி மாணவிகள் பலியான விவகாரத்தில் அமெரிக்காவின் இலக்கு தவறியதாக வெடித்தது பகீர் புகார்

ஈரானின் மினாப் கவுண்டியில் உள்ள ஒரு சிறுமியர் பள்ளியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 160-க்கும் மேற்பட்ட மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில், அமெரிக்காவின் தவறான இலக்கு நிர்ணயமே காரணம் என அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு புலனாய்வு முகமை வழங்கிய பழைய தரவுகளின் அடிப்படையில், ஒரு பள்ளி கட்டிடம் தவறுதலாக ராணுவ இலக்காகக் கருதப்பட்டதாக அமெரிக்க ராணுவ விசாரணையின் ஆரம்பக்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று கடற்படை தளத்திற்குப் பதில் ஷஜாரா தயேபே பள்ளியின் மீது இந்த ஏவுகணை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த கோர விபத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தாக்குதலை ஈரானே நடத்தியிருக்கலாம் என்று கூறினார். டோமாஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் குறித்துக் கேட்டபோது, அத்தகைய ஆயுதங்கள் ஈரானிடமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். தற்போது இந்த உளவுத்துறை தோல்வி குறித்த விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.