சிலிண்டருக்கு இறுதிச்சடங்கு நடத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்

மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் இந்தியாவில் வணிக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, இறுதிச்சடங்கு நடத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த தட்டுப்பாட்டினால் ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி 50-க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து ரஷ்யாவிடமிருந்து எரிவாயு பெறுவதை மத்திய அரசு தவிர்ப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். இதன் விளைவாக நாட்டின் இறையாண்மை மற்றும் சாமானியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் எச்சரித்தனர். போர்க்கால அடிப்படையில் எரிவாயு தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகும் என்று போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.