ஈரான் போர் எதிரொலியால் ஏர் இந்தியா விமானக் கட்டணம் அதிரடியாக உயர்வு

ஈரான் போர் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்களுக்கு கூடுதல் ‘எரிபொருள் கூடுதல் கட்டணத்தை’ விதித்துள்ளது. வரும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தால், உள்நாட்டுப் பயணங்களுக்கு ₹399 மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்குச் செல்ல சுமார் ₹900 வரை கூடுதல் செலவாகும். தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான கூடுதல் கட்டணம் முறையே 60 மற்றும் 90 டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக மார்ச் 18 முதல் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கான கட்டணமும் உயர்கிறது. இருப்பினும், மார்ச் 12-க்கு முன் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் விமான எரிபொருள் விலை உச்சத்தை தொட்டுள்ளதால், நஷ்டத்தைத் தவிர்க்க ஏர் இந்தியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.